சொல்வளர்காடு - சில வரிகள்
வெண்முரசு நூல்வரிசையில் பதினொன்றாவது நூல் சொல்வளர்காடு. அதன் வாசிப்பனுபவம் சிலவரிகளில்.. "ஊழின் வழிகளைப்பற்றி ஒருபோதும் உள்ளி உள்ளிச் சொல்லாடலாகாது என்பதே மூதாதையர் கூற்று. அங்கு நிகழ்ந்தவை வேறுமுறையில் நிகழமுடியாதவை என்று உணரும் அடக்கம் இருந்தால் மட்டுமே. அவை அளித்த துயரத்தைக் கடக்கமுடியும்" சுனகக்காட்டில் தர்மனிடம் சொல்கிறார் காத்யாயனர். பன்னிரு படைக்களத்தில் இருந்து காடேகுகின்றனர் பாண்டவர்கள். உடன் தம்பிகளும் திரௌபதியும் வந்தாலும் மெய்மை தேடுவதோ தருமர்தான். கெளஷீதகம் , சுனகம் , துவைதம், ஐதரேயம் , தைத்ரியம் , பிருஹதாரண்யகம், சாந்தீபனி , மைத்ராயனியம், யக்க்ஷவனம் ஆகிய ஒன்பது காடுகளைக் கடந்து கந்தமாதானத்தில் கனலாடி மீள்கிறார் தருமன். குருநிலைகள் , அவர்களின் மரபு வரிசை அதையொட்டிய புராணக்கதைகள் என விரிந்து முன்நிற்கிறது ஒவ்வொரு காடும். சுனகத்தில் இருக்கும்போது மறுபடியும் அஸ்தினபுரியில் நிகழ்ந்ததும் அதையொட்டிய நிகழ்வுகளும் நாடகத்தருணங்களும் விரித்துரைக்கப்படுகிறது .மீண்டும் திருதராஷ்டிரரின் தந்தைப்பற்றும். அங்கிருந்து சினத்தில் கிளம்புகிறார் விதுரர் .அஸ்தினப...