தூயது

குழலினிது யாழினிது தொடங்கி இன்று வரை குழந்தைகளை சிலாகிக்காத போற்றாத இலக்கியங்கள் இல்லை . அனைத்தையும் படித்துவிட்டுதான் அந்த குழந்தைகளை வன்புணர்வுக்கு நிகராக பெற்றோர் என்ற பெயரில் அவர்தம் வளர்ச்சியில் அக்கறை என்ற பெயரில் அவர்களை நசுக்கவும் செய்கிறோம் .

எழுத்தாளரும் கதைசொல்லியுமான திரு பவா செல்லத்துரை ஒருமுறை சொன்னார். "உலகத்திலேயே அதிகக் கொடுமைக்கு உள்ளாவது பெண்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன ஆனால் நான் சொல்கிறேன் . பெண்கள் அல்ல குழந்தைகள் . அதுவும் பெற்றோரால் சுற்றத்தால் சமூகத்தால் " என்று . நானும் அதை பெரும்பாலும் ஒத்துக்கொள்கிறேன். மல்லாக்கப் படுத்து என்னையே நான் மாரில் துப்பிக்கொள்ளும் வகையான சீறல்களை எனது குழந்தைகளிடம் காண்பிக்கும் தருணங்கள் தவிர்த்து மற்ற நேரத்தில் .

சரி இப்போது நான் சமீபத்தில் என் குழந்தைகளிடம் கண்ட தூய தருணங்கள் சில .

முதலாவது :

இரவு தூங்கப்போகும் நேரம் . கணவன் மனைவி என்ற சொற்களை எங்களிடமோ அல்லது வேறெங்கோ கேட்டுவிட்டு அதன் பொருளறிய விழைந்தான் நான்கு வயதாகும் நிமலன் ரெங்கநாதன். நாங்களும் திருமணம், கல்யாணம், குடும்பம் என விளக்கம் கொடுத்தோம். அவனது அடுத்த கேள்வி 'நான் யாரை கல்யாணம் பண்றது ? ' நீ பெரியவனா ஆனதும் சொல்றோம் அப்ப ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணலாம் என்றோம் . அதற்கு அவனின் பதில் ' இல்ல நான் அம்மாச்சிய தான் கல்யாணம் பண்ணுவேன் '

இரண்டாவது :

எட்டு வயதாகும் யாகவியும் நானும் உணவருந்திக் கொண்டிருந்தோம் விரைவில் நடக்கவிருக்கும் எனது அக்காள் மகனின் திருமணத்தைப் பற்றி பேச்சு வந்தது . அவள் சமீபத்தில் நடந்த அவளின் சித்தி திருமணம் போல அது இருக்குமா என்றாள் ( அதாவது முதல் நாள் வரவேற்பு, மாப்பிளை சாரட்டில் ஊர்வலம் , குளிரூட்டப்பட்ட அரங்கில் திருமணம் , அங்குள்ள அறைகளிலே மணவீட்டார் தங்குவது இப்படி ). நான் இல்லம்மா இது வேற மண்டபம் வரவேற்பு கிடையாது அங்க தங்குறதும் தேவை இல்ல . காலையிலே திருமணம் முடித்து மதியம் மாலை வீடு வந்து விடலாம் என்றேன் . அதற்கு அவள் 'சரி சரி ரொம்ப பெரியவிளக்கமா கொடுக்குறீங்க . நான் இதுவரைக்கும் பாத்ததே ரெண்டு கல்யாணம்தான் ஒன்னு என் மாமா கல்யாணம் இன்னொன்னு சித்தி கல்யாணம் . என் சொந்த அம்மா அப்பா கல்யாணத்தையே நான் பாக்கல ' என்றாள்

மூன்றாவது :

இரவுணவு நேரம் சட்னியில் இருந்த கருவேப்பிலையை சாப்பிட சொல்லி நிமலனிடம் சொன்னேன் . அத சாப்ட்டா ஆர்ம்ஸ் வருமா என்றான் . ஆமா வரும் என்றேன் . எனக்கு ஏற்கனவே ஆர்ம்ஸ் பெருசுதான் என்று டி சர்ட்டை தூக்கி காண்பித்தான் . இல்லப்பா கூடவே முடி நல்லா வளரும் என்றேன் . உங்கள மாறியா என்றான் . அவன் கேட்ட தோரணையை வைத்து எந்த பதில் சொல்வது என உடனே யூகிக்கமுடியவில்லை . அதனால் இல்ல இன்னும் நல்லா வளரும் என்றேன் . அவன் கோபமாக கறிவேப்பிலையை தூக்கி கீழே போட்டுவிட்டு ' இல்ல உங்கள மாதிரிதான் எனக்கு வேணும் ' என்றானே . அன்றிரவு இனிய தூக்கம் ஆச்சரியத்துடனும் அகமலர்ச்சியுடனும்!

வரவு செலவு கணக்கு எழுதுகிறேனோ இல்லையோ . இந்த தருணங்களை பதிவு செய்துவிடவேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது. அது அவர்களின் குழந்தைமையை நம் மனதிற்குள் இருந்து எத்தருணத்திலும் மீட்டெடுக்க வழிசெய்யும் அல்லவா.

Comments

  1. ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு என்ற ஜெயமோகனின் புத்தகத்தை நீங்கள் வாசித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்த புத்தகம் நம்மை குழந்தைகளின் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். மாறப் புன்னகையுடன் படித்து முடிக்கலாம். ❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெண்முரசு - வெய்யோன் - வாசிப்பனுபவம்

க.நா.சு - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

ரா.கிரிதரனின் சாதகப்பறவையின் காத்திருப்பு